மும்பையின் மஹிம் ரயில் நிலையத்தின் நடைமேடையில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக இருவர் ஒருவரோடு ஓருவர் மோதிக்கொண்டனர். தவறுதலாக மோதிய நபர் உடனடியாக மாற்று நபரிடம் “ஸாரி” கேட்டுள்ளார். ஆனால், அந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாத மற்றொரு நபர், கடும் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்தச் சிறிய மோதல் சில நிமிடங்களில் பெரிய சண்டையாக மாறியது. ஆத்திரமடைந்த அந்த நபர், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து, தற்செயலாக மோதியவரை மிகக் கொடூரமாகக் குத்தியுள்ளார். ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்தபோதே இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது அங்கிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீஸார் , ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தத் தாக்குதலை நடத்திய நபரைக் கைது செய்த போலீஸார், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
