தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரடிகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான சஞ்சய், தனது உறவினரான குமார் என்பவரின் மகள் கனகலெட்சுமியை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்குப் பெண் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் சஞ்சய் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த கனகலெட்சுமியின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர்களான மாரிமுத்து, சங்கரநாராயணன் ஆகியோர் காதல்குறித்து பேசித் தீர்ப்பதாகக் கூறி சஞ்சய்யை தங்களோடு அழைத்துச் சென்றுள்ளனர்.
அமைதியாகப் பேசுவது போல் நடித்து, சஞ்சய்யை ஏமாற்றி அழைத்துச் சென்ற அந்த கும்பல், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைச் சரமாரியாகக் குத்திப் படுகொலை செய்துள்ளது. இக்கொடூரத் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த ஆணவக் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கோவில்பட்டி போலீசார், சஞ்சய்யைக் கொடூரமாகக் கொலை செய்த காதலியின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர்களை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
