கோவையின் சில தொகுதிகளில் திமுகவினர் முறையாகப் பணி செய்யாதது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வாக்காளர்களுக்குச் சென்றடைய வேண்டிய ‘கவனிப்புகள்’ சரியாகச் சென்றதா என்பது குறித்து அவர் தனித்தனியாக ஆட்களை வைத்து ரகசிய விசாரணை நடத்தி வருகிறாராம். இந்த அதிருப்தி காரணமாகவே, வாக்குப்பதிவு நாளன்று அவர் தனது சொந்த ஊரான கரூருக்கு வாக்களிக்கக் கூடச் செல்லாமல், கோவை தெற்குப் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி அங்கேயே முகாமிட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய உடன்பிறப்புகள் மீது செந்தில் பாலாஜி கடும் கோபத்தில் இருப்பதாகவும், இது தொடர்பாகத் தலைமைக்கு அறிக்கை செல்லக்கூடும் என்றும் கூறப்படுகிறது. கோவையைத் தனது அரசியல் கோட்டையாக நிலைநிறுத்தப் போராடி வரும் வேளையில், கட்சிக்குள்ளேயே நடந்த இந்தச் சொதப்பல்கள் அவரது அடுத்தகட்ட நகர்வுகளில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.
