திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜிக்கும் லதா மங்கேஷ்கருக்கும் இடையே சகோதர சகோதரி பந்தம் இருந்தது என்பது பலருக்கும் தெரியாத விஷயம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜியின் மகன் பிரபு அளித்த பேட்டியில், தனது தந்தையும் லதா மங்கேஷ்கரும் நல்ல நண்பர்கள் என கூறியிருந்தார்.
லதா மங்கேஷ்கர் சிவாஜியின் மிகப்பெரிய ரசிகை. அவர் சிவாஜியின் ஒரு படத்தை பார்த்துவிட்டு தமிழகத்திற்கு வந்ததால் இருவருக்கும் இடையேயான நட்பு மேலும் வலுவடைந்தது. லதா மங்கேஷ்ரும் அவரது சகோதரிகளும் சிவாஜி அண்ணா என அன்புடன் அழைப்பார்கள் என பிரபு கூறியிருந்தார்.
கடந்த 1987-ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ஆனந்த் என்ற படத்தில் ஆராரோ ஆராரோ என்ற பாடலை லதா மங்கேஷ்கர் பாடினார். இந்தப் பாடல் பாடியதற்கு லதா மங்கேஷ்கர் சம்பளம் வாங்க மறுத்துவிட்டார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் லதா மங்கேஷ்கர் எப்போது சென்னை வந்தாலும் அவர் தங்குவதற்காக சென்னையில் இருக்கும் தனது அன்னை இல்லம் வீட்டில் ஒரு பங்களாவை கட்டியுள்ளார்.
மேலும் லதா மங்கேஷ்கருக்கு ஹோட்டல் உணவு பிடிக்காது என்பதால் சிவாஜியின் மனைவி உணவு சமைத்து லதா மங்கேஷ்கருக்கு கொடுத்து அனுப்பியுள்ளார். எங்களது இரு குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் பரிசுகளை அனுப்பி அன்பை பரிமாறி கொள்வோம் என பிரபு ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்தார்.