கலிபோர்னியாவில், சிறார் சீர்திருத்த இல்லத்தில் பணிபுரிந்த 26 வயது மனநல சிகிச்சையாளரான சோபியா ட்ரோட்ஸ், தான் ஆலோசனை வழங்கிய 17 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கான்ட்ரா கோஸ்டா கவுண்டியில் உள்ள ஜான் டேவிஸ் சிறார் தடுப்பு மையத்தில் சிறுவன் இருந்தபோது, சோபியா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவனுடன் முறையற்ற உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும், அச்சிறுவன் சிறந்த முன்னேற்றம் அடைந்து வருவதாக அவனது தாயிடம் கூறி பொய்யான நம்பிக்கையையும் பெறச் செய்துள்ளார்.
சிறுவன் சீர்திருத்த இல்லத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ஏப்ரல் 1 முதல் ஜூலை 14 வரை சோபியா அவனைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். சிறுவனின் தாய்க்கு சந்தேகம் வராமல் இருக்க, ஒரு பதின்வயது காதலி போல நடித்து அவனுடன் தொடர்பில் இருக்க போலி தொலைபேசியைப் பயன்படுத்தியுள்ளார். பகலில் மாவட்ட மனநல ஆலோசகராக தாயையும் மகனையும் சந்தித்துவிட்டு, இரவில் ரகசியமாக தனது காரில் சிறுவனைச் சந்தித்து இந்த முறையற்ற உறவைத் தொடர்ந்துள்ளார்.
இறுதியாக, சிறுவன் வெளியூரில் சென்று தங்கியது தாய்க்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், அதிகாரிகள் நடத்திய சோதனையில் சோபியாவின் முறையற்ற உறவுக்கான ஆதாரங்கள் சிக்கின. இதன் மூலம் உண்மையை உணர்ந்த தாய், தன் மகனின் நல்வாழ்விற்காக நம்பி ஒப்படைத்த நிபுணரே இந்த துரோகத்தைச் செய்ததாகக் கண்ணீர்மல்கத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள சோபியா மீது சட்டவிரோத பாலியல் உறவு, சிறாருக்குத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை அனுப்புதல் மற்றும் குழந்தைப் பாலியல் ஆபாசப் படங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
