காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள அங்கம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், எழுந்து நடமாடக் கூட முடியாத நிலையில் படுத்த படுக்கையாகத் தனது தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவரது பெற்றோர் வழக்கம்போல் மாடு மேய்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொள்ளத் திட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற நபர், அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
தீப்பெட்டி கேட்பது போல வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பாலகிருஷ்ணன், முதலில் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பேச முயன்றுள்ளார். தொடர்ந்து வீட்டில் பெற்றோர் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட அவன், மாற்றுத்திறனாளி பெண் என்றும் பாராமல், மனிதாபிமானமற்ற முறையில் அந்தப் பெண்ணின் வாயைப் பொத்தி கொடூரமாகப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். இந்த கொடூரச் செயலை அரங்கேற்றிவிட்டு, யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.
இதற்கிடையில், வெளியில் சென்றிருந்த பெற்றோர் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண், தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்துத் தனது தாய் மற்றும் அண்ணன்களிடம் அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் உடனடியாக பாலகிருஷ்ணனைத் தேடிப் பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினரும், பொதுமக்களும் அங்கு திரண்டு வந்து, அந்த காமுகனுக்குப் பொது இடத்தில் வைத்து தர்மஅடி கொடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் முன்னிலையில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணே காவல் உதவி எண்ணான 100-க்குத் தொடர்பு கொண்டு நடந்த அநீதி குறித்துப் புகார் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபாத் காவல்துறையினர், பொதுமக்களிடம் இருந்து பாலகிருஷ்ணனை மீட்டு, கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்துப் பொதுமக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் பெண் பிள்ளைகளுடன் வசித்து வருவதால் எங்களுக்குப் பெரும் பயம் ஏற்பட்டுள்ளது; எனவே இவன் மீண்டும் வெளியே வராதபடி கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என காவல்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். எழுந்து நடக்கக் கூட முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த இந்த வன்கொடுமை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
