“அம்மா என்னை காப்பாத்துங்க… கதறிய மகள்”… 24 மணி நேரமும் வாட்ச் செய்த கணவன்…. பெற்றோர் ஓடி வருவதற்குள் வீட்டில் நடந்த விபரீதம்… இறுதியில் அம்பலமான பகீர் உண்மை..!

By Nanthini on ஆனி 19, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள தானே மாவட்டத்தின் அம்பர்நாத் பகுதியில், திருமணம் முடிந்த 47 நாட்களிலேயே இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. அம்பர்நாத் சிவாஜி நகரைச் சேர்ந்த விசாக்கா தில்கர் (26) என்ற பெண்ணுக்கும், நிதின் தில்கர் என்ற மருத்துவருக்கும் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி கோலாகலமாகத் திருமணம் நடந்துள்ளது. புதிய கனவுகளுடன் புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த விசாக்காவிற்கு, ஆரம்ப நாட்கள் நன்றாகச் சென்றாலும், மிக விரைவிலேயே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடூரமான அசல் முகம் வெளிப்படத் தொடங்கியது.

திருமணத்தின் போது போதுமான தங்க நகைகளும், பணமும் வரதட்சணையாக வரவில்லை என்று கூறி விசாக்காவை அவரது புகுந்த வீட்டினர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்யத் தொடங்கினர். விசாக்காவின் பெற்றோரிடம் இருந்து கூடுதலாக 50 கிராம் தங்க நகைகளை வரதட்சணையாக வாங்கி வருமாறு கணவர் நிதின் மற்றும் மாமியார் சாயாபென் ஆகியோர் தொடர்ந்து கட்டாயப்படுத்தி, கடுமையான கொடுமைகளை இழைத்து வந்துள்ளனர். இந்த வரதட்சணைக் கொடுமை ஒருபுறமிருக்க, விசாக்காவின் ஒட்டுமொத்த தனிமனித சுதந்திரத்தையும் பறிக்கும் வகையில் கணவர் நிதின் நடந்து கொண்டதுதான் கொடுமையின் உச்சம்.

   

மனைவியின் நடத்தையின் மீது அநாவசியமாகச் சந்தேகம் கொண்ட கணவர் நிதின், வீட்டின் உள்ளேயும் வெளியேயும் அனைத்துப் பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளார். அதன் நேரலைக் காட்சிகளைத் தனது செல்போனுடன் இணைத்துக் கொண்டு, விசாக்கா வீட்டில் என்ன செய்கிறார், யாரிடம் பேசுகிறார் என்று 24 மணி நேரமும் ஒரு கைதியைப் போலக் கண்காணித்து வந்துள்ளார். அக்கம் பக்கத்தினருடன் கூடப் பேசக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், விசாக்கா யாராவது ஒருவரிடம் பேசினாலும் சிசிடிவி மூலம் அதைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு ஓடிவரும் நிதின், அவரை மிருகத்தனமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

   

சம்பவத்தன்று அக்கம் பக்கத்து பெண் ஒருவரிடம் விசாக்கா பேசியதை கேமராவில் பார்த்த நிதின், வீட்டிற்கு வந்து அவரை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார். இதனால் வேதனையடைந்த விசாக்கா, தன் தாயைத் தொடர்புகொண்டு கதறி அழுதுள்ளார். பதறிப்போன பெற்றோர் மகளை மீட்க அம்பர்நாத்திற்குப் புறப்பட்டனர்; ஆனால் அவர்கள் வந்து சேருவதற்கு முன்பாகவே விசாக்கா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வரதட்சணைக் கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், கணவர் நிதினைக் கைது செய்தனர். மேலும், தப்பியோடி தலைமறைவாக இருந்த மாமியார் சாயாபென் மற்றும் கொழுந்தன் நிநாத் ஆகியோரையும் தனிப்படை அமைத்துச் சுற்றி வளைத்துக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.