திட்டுவாரு… ஆனா?… அப்போதிலிருந்து இப்போது வரை- கவுண்டமணி பற்றி நெகிழ்ச்சியாகப் பேசிய செந்தில்.!

By vinoth on மாசி 26, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளனர். முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் செந்தில் ஆசைப்படவில்லை. நாடகங்களில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.

அப்போது அவரின் வெகுளித்தனம் மற்றும் உடல்வாகு ஆகியவற்றை வைத்து சுற்றி இருப்பவர்கள் எல்லாம் காமெடியாக அவரை கேலி செய்வார்களாம். அதைப் பார்த்து பாக்யராஜ் தன்னுடைய படங்களில் அவருக்கு முக்கியமான வேடங்களைக் கொடுத்தார். தூறல் நின்னு போச்சு படத்தில் அவருக்கு முக்கிய வேடம் கொடுத்த போது நன்றி சொல்லி கண்ணீர் விட்டு அழுதாராம்.

   

கவுண்டமணியோடு அவர் உதயகீதம் மற்றும் வைதேகி காத்திருந்தாள் போன்ற இணைந்து நடித்த போது அந்த இணையின் மீதான கவனம் ரசிகர்கள் மேல் விழ ஆரம்பித்தது. அதன் பின்னர் கரகாட்டக்காரனில் உச்சம் தொட்டது அவர்களின் நகைச்சுவை. இருவரும் இணைந்து நடித்தாலும் சம்பளத்தைப் பொறுத்தவரை கவுண்டமணிக்குதான் அதிகமாக தயாரிப்பாளர்கள் கொடுப்பார்களாம்.

   

 

செந்தில் கவுண்டமணி அண்ணனுக்கு கொடுப்பதில் பாதியை எனக்குக் கொடுங்கள் என வாங்கிக் கொள்வாராம். இப்படி 25 வருடங்களுக்கு மேலாக இணைந்திருந்த அவர்கள் கடைசி 15 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து நடிக்கவில்லை. அதன் பின்னர் தனித்தனியாக படங்களில் நடித்தாலும் இணைந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் செந்தில் தன்னுடைய சக கலைஞரான கவுண்டமணி பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். அதில் “அப்போதில் இருந்து இப்போது வரை நான் நேசிக்கும் கலைஞர் கவுண்டமணிதான். அவர் எனக்கு அண்ணன்தான். அதேபோல நல்ல நண்பர். நான் தப்பா நடிச்சா திட்டுவாரு.  ஆனால் அதை அப்படியே மறந்துடுவார். மனசுல வச்சிக்க மாட்டாரு,. கூட நடிக்குற நடிகர்கள் எல்லோருக்கும் உதவியா இருப்பாரு” எனக் கூறியுள்ளார்.