தமிழ் சினிமாவில் 90 களில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருந்த போது தனி வழியில் சென்றவர்தான் தேனிசைத் தென்றல் தேவா. விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களொடும், பாலச்சந்தர், பாரதிராஜா, வசந்த் என முன்னணி இயக்குனர்களோடும் பணியாற்றி பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.
தேவாவின் சினிமா வாழ்க்கையில் அவர் ரஜினிக்காக இசையமைத்த அண்ணாமலை மற்றும் பாட்ஷா ஆகிய இரு படங்களும் மைல்கல்லாக அமைந்தன. அதுவரை ரஜினி – இளையராஜா காம்பினேஷன் வெற்றிக்கொடி நாட்டி வந்த நிலையில் தேவா ரஜினி படங்களுக்கு தன் இசையால் புத்துயிர் ஊட்டினார்.
2000 களுக்குப் பிறகு இசையின் வடிவம் மாறியதாலும் புது இசையமைப்பாளர்கள் அறிமுகத்தாலும் தேவா மெல்ல மெல்ல வாய்ப்புகளை இழந்து ஓரம் கட்டப்பட்டார். பல ஆண்டுகள் காணாமல் போயிருந்த தேவா தற்போது சில படங்களுக்கு மீண்டும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார். அதில் அறம் இயக்குனர் கோபி நயினார் இயக்கும் படமும் ஒன்று.

தேவா என்றாலே கானா வடிவிலான துள்ளலிசைப் பாடல்கள்தான் உடனே நினைவுக்கு வரும். ஆனால் அவர் பல மெல்லிசைப் பாடல்களையும் கொடுத்துள்ளார் என்பது தற்கால இளைஞர்கள் அறியாதது. அதிலும் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் அவர் இசையமைத்த ஆசை மற்றும் நேருக்கு நேர் படத்தின் பாடல்கள் எல்லாம் இன்றளவும் கேட்டு ரசிக்க்கத்தக்கவை.
இந்நிலையில் பாடல்களை உருவாக்குவதில் தனக்கு இயக்குனர் வசந்த் கொடுத்த முக்கியமான அட்வைஸ் ஒன்றை தேவா ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் ”இயக்குனர் வசந்த் பாடலை உடனே ஆரம்பிக்க விரும்பமாட்டார். எல்லாப் பாடல்களிலும் அவருக்கு முன்னிசை (prelude) இருக்க வேண்டும். அதுபற்றி ஒருமுறை அவர் பேசும்போது ‘வீட்டுக்கு யாராவது விருந்தினர் வந்தால் முதலில் காபி, டீ கொடுத்துவிட்டு அதன் பிறகுதானே சாப்பாடு போடுவோம். அதுபோலதான் இந்த முன்னிசை’ என்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
