கடந்த 2021-2025 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவருடைய இலாக்கா கட்டுப்பாட்டில் இருந்த டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்கள் கொள்முதல் செய்தது, மதுபானக் கூடங்களுக்கு உரிமம் வழங்கியது மற்றும் ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜியைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தங்கள் அதிரடி நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, இந்த டாஸ்மாக் முறைகேட்டில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த இருவரும் ஏற்கனவே குதிரை பேர வழக்கில் சிக்கி ஜாமினில் வெளிவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
