அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் (OPS) ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்காதது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், “நாங்கள் யாருடனாவது கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினால், உடனடியாக டெல்லியில் இருந்து (பாஜக) வந்துவிடுகிறார்கள். இதனால் கூட்டணி தொடர்பான விஷயங்களை ரகசியமாக வைப்பதே நல்லது” என்று அரசியல் சூழ்ச்சிகளைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் செய்தியை இப்போதுதான் கேள்விப்பட்டதாக அவர் தெரிவித்தார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த செங்கோட்டையன், “நல்லது நடந்தால் மகிழ்ச்சி” எனக் கூறி அந்தப் பேச்சுவார்த்தைக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கூட்டணிக் கணக்குகள் நாளுக்கு நாள் மாறி வரும் நிலையில், செங்கோட்டையனின் இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
