தமிழக அரசியல் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் ஈரோடு மாவட்ட தேர்தல் களம் தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அதிமுகவின் அசைக்க முடியாத தூணாகக் கருதப்பட்ட மூத்த அரசியல்வாதி கே.ஏ. செங்கோட்டையன், திடீரென அக்கட்சியிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததோடு, அந்தியூர் தொகுதியின் வேட்பாளராகவும் களமிறங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அந்தியூர் பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி மீது அவர் முன்வைத்த காட்டமான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
தனது பிரச்சாரத்தில் “மலைப்பாம்பு” மற்றும் “பணப்பெட்டி” ஆகிய உதாரணங்களைக் கையாண்ட செங்கோட்டையன், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வர் நாற்காலியைப் பிடித்த ரகசியங்களைப் பகிரங்கமாக உடைத்துள்ளார். சசிகலா தன்னைத்தான் முதல்வர் வேட்பாளராகத் தேர்வு செய்ததாகவும், ஆனால் ஒரே இரவில் பண பலத்தால் எடப்பாடி பழனிசாமி அந்த வாய்ப்பைத் தட்டிப் பறித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், கொங்கு மண்டலத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலை முதலீடுகள் மூலம் அதிமுக தலைமை பெரும் லாபம் ஈட்டியுள்ளதாக அவர் அடுக்கிய புகார்கள், கட்சித் தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமி கையாண்ட உத்திகளையும் செங்கோட்டையன் கடுமையாகச் சாடினார். டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி பாஜக மற்றும் பிரேமலதா விஜயகாந்த் வரை அனைவரையும் தனக்குத் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொண்டு, பின்னர் அவர்களைக் கழற்றிவிட்டதாக அவர் விமர்சித்தார். அண்ணாமலையை நீக்கினால் தான் கூட்டணி என்று நிபந்தனை விதிக்கும் அளவிற்கு எடப்பாடியின் அரசியல் போக்கு மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், “50 லட்சம் கோடி கொள்ளையடித்தது பத்தாது என்று இன்னும் ஆசைப்படுகிறார்கள்” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அதிமுகவின் பல ரகசியங்களை விரல் நுனியில் வைத்துள்ள செங்கோட்டையன் போன்ற ஒரு மூத்த தலைவர், இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் நின்று பேசுவது அக்கட்சிக்கு மிகப்பெரிய “பிளஸ் பாயிண்டாக” அமைந்துள்ளது. அறிமுகமே இல்லாத புதிய களத்தில் இறங்கியுள்ள தவெக-விற்கு, செங்கோட்டையனின் அனுபவமும் அவரது ஆக்ரோஷமான பேச்சும் பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் திடீர் திருப்பம் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் சரிவை ஏற்படுத்துமா அல்லது தவெக-விற்குப் பெரும் வெற்றியைத் தேடித் தருமா என்பதை தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும்.
