திமுகவை வீழ்த்த இவரால் மட்டுமே முடியும்… எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய்யை வைத்த செங்கோட்டையன்…!!!

By Rajeshwari on பங்குனி 2, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்தும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசிய உருக்கமான கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. ஈரோட்டில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், தான் அதிமுகவில் இருந்து விலகிய பிறகு தன்னை அரவணைத்துக் கொண்டவர் விஜய் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இது குறிப்பாக, தனது சட்டையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருப்பதை கவனித்த விஜய், “நீங்கள் எப்போதும் ஜெயலலிதா அம்மாவின் புகைப்படத்தை வைத்துக் கொள்ளுங்கள், அதுதான் எனக்கு மகிழ்ச்சி” என்று கூறியதாக செங்கோட்டையன் தெரிவித்தார். மற்ற தலைவர்கள் தங்களது புகைப்படத்தை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் காலத்தில், மாற்றுத் தலைவருக்கு மரியாதை அளிக்கும் விஜய்யின் பண்பு தன்னை வியக்க வைத்ததாக அவர் பாராட்டினார்.

   

மேலும் திமுகவை வீழ்த்தும் ஆற்றல் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்குப் பிறகு தற்போது தளபதி விஜய்க்கு மட்டுமே இருப்பதாக செங்கோட்டையன் தனது உரையில் ஆணித்தரமாகத் தெரிவித்தார். தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய்யை கோட்டையில் அமர வைப்பதற்கான ஆயத்தமாகவே இந்த கூட்டங்கள் நடைபெறுவதாகக் குறிப்பிட்ட அவர், ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் நேசிக்கும் பண்பு விஜய்யிடம் இருப்பதாகக் கூறினார்.

   

இந்நிலையில் 26 வயதில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய தனக்கு, தற்போது விஜய்யுடன் இணைந்து பயணிப்பது மூன்றாவது தலைமுறைத் தலைவருடனான பயணம் என்றும், ராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்படும் தவெக தொண்டர்களின் அமைதியே விஜய்யின் வெற்றியை உறுதி செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.