தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுவதை விட, தொடர் சர்ச்சைகளே அதிகம் பேசுபொருளாகி வருகின்றன. முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் பல்வேறு விவகாரங்களில் சிக்கி விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆய்வு என்ற பெயரில் சமூக ஊடகங்களில் ‘ரீல்ஸ்’ மோகத்துடன் வலம் வருவது, பொதுவெளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசுவது என அரசின் செயல்பாடுகள் விமர்சிக்கப்படும் நிலையில், தற்போது மூத்த அமைச்சர் செங்கோட்டையனும் ஒரு புதிய சர்ச்சையில் இணைந்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த புதிய ஆட்சிக் காலத்தில் மக்கள் எதிர்பார்க்கும் அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றும் வகையில் அமைச்சரவை தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும், தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார்.
இருப்பினும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பாதிப்பு மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. புதிய அரசு அமைந்து சில நாட்களே ஆவதால், நிர்வாகம் தன்னிச்சையாகச் செயல்பட சில மாதங்களாவது அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கூறியவர், “அதற்குள்ளாகவே கேள்வி கேட்பது வேடிக்கையாக இருக்கிறது; உங்கள் வீட்டில் ஏதாவது பிரச்சனையா, எல்லாரும் நன்றாகத் தானே இருக்கிறார்கள்” எனத் தனிப்பட்ட முறையில் மிரட்டும் தொனியில் பேசியது செய்தியாளர்களைக் கொந்தளிக்கச் செய்தது.
அமைச்சரின் இந்த தடித்த வார்த்தைகளால் கோபமடைந்த பத்திரிகையாளர்கள், அவரிடம் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர்களை மிரட்டும் தொனியில் பதில் அளிக்கிறீர்களா என்று அவர்கள் கேள்வி எழுப்பியபோது, சற்றே நிதானித்த அமைச்சர், தான் யாரையும் மிரட்டவில்லை என்றும், எதிர்க்கட்சியினராலேயே மென்மையான சுபாவம் கொண்டவர் என்று பாராட்டப்பட்டவன் நான் என்றும் விளக்கமளித்தார். மேலும், சூலூர் சம்பவத்தில் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், சட்டம் ஒழுங்கு சிக்கல்களை முதல்வர் படிப்படியாகச் சரி செய்து வருவதால், அதற்குரிய கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவதைத் தடுப்பதில் தவெக அரசு உறுதியாக இருப்பதாகவும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு சிறந்த கூட்டணி அமைச்சரவை உருவாக்கப்பட்டு, தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் செங்கோட்டையன், நல்ல காரியங்களைச் செய்யும் பத்திரிகையாளர்களை ஊக்கப்படுத்துவதும், அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதுமே இந்த அரசின் தலையாய கடமை என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.
