“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

By Nanthini on சித்திரை 19, 2026

Spread the love

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம் காண்கிறார். இந்நிலையில், அங்கு அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை மிகக் கடுமையாக விமர்சித்தார். “செங்கோட்டையனைப் பற்றி என்னிடம் பல ரகசியங்கள் உள்ளன, அவற்றைச் சின்னத் திரையில் வெளியிட்டால் அவர் வெளியில் தலைகாட்ட முடியாது; மக்கள் காறித் துப்புவார்கள்” என ஒருமையில் விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடியின் இந்த விமர்சனத்திற்குச் செங்கோட்டையன் தரப்பிலிருந்து அனல் பறக்கும் பதிலடி கிடைத்துள்ளது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி குழம்பிப் போய் பேசுகிறார். சாக்கடையில் கல்லை எறிந்தால் அது நம் மீதுதான் தெறிக்கும்; அதுபோலத்தான் எடப்பாடியின் பேச்சும் உள்ளது. நான் உண்மையான ஆதாரங்களை எடுத்துவிட்டால் அவரால் தாங்க முடியாது. ஜெயலலிதா அவர்களால் 2009-ல் ஓரங்கட்டப்பட்ட எடப்பாடிக்கு, நான்தான் பரிந்துரை செய்து வாரியப் பதவி வாங்கிக் கொடுத்தேன்” என ஆவேசமாகத் தெரிவித்தார்.

   

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனதற்கே தான் தான் முக்கியக் காரணம் என்ற ரகசியத்தை உடைத்தார். “அன்று என்னுடன் 64 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். நான் மட்டும் முன்மொழியவில்லை என்றால் எடப்பாடியால் ஒருபோதும் முதல்வர் ஆகியிருக்க முடியாது. இப்போது எனக்கு அவர் பதவி கொடுத்ததாகக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அதிமுகவும் திமுகவும் கைகோர்த்துக்கொண்டு கூட்டுக்கொள்ளையில் ஈடுபடுகின்றன. வரும் தேர்தலில் தவெக-விற்கும் திமுக-விற்கும் தான் நேரடிப் போட்டி; மக்கள் விஜய்யை முதல்வராக்கத் தெளிவாக இருக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

   

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நீண்ட கால அரசியல் நண்பர்களாக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையிலான இந்த மோதல் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “சிதம்பர ரகசியம்” என செங்கோட்டையன் குறிப்பிடும் அந்தத் தகவல்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, ‘துரோகம்’ மற்றும் ‘ரகசியங்கள்’ குறித்த இந்த விவாதம் கோபிசெட்டிபாளையம் தேர்தல் களத்தை ரணகளமாக்கியுள்ளது.