தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுகவில் உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேகர்பாபு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எழும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன், தனது எக்ஸ் (X) தளத்தில் இது தொடர்பாகப் பதிவிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு அண்ணா அறிவாலயத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த சோகத்துடன் வெளியேறிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பரந்தாமன், “தோல்விக்குக் காரணமானவர் எப்படிக் கூச்சமின்றித் தலைவரை நேரில் பார்க்கிறார்” என்று சேகர்பாபுவைத் டேக் (Tag) செய்து கடுமையாகச் சாடியுள்ளார். தோல்விக்கு முக்கியக் காரணமாகச் சேகர்பாபுவின் செயல்பாடுகளே இருந்ததாகக் கட்சிக்குள் அதிருப்தி கிளம்பியுள்ளதையே இது காட்டுகிறது.
இந்தச் சர்ச்சைக்குரிய பதிவின் கீழ் திமுக உடன்பிறப்புகள் பலரும் சேகர்பாபுவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் எனத் தொடர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதனால் திமுக தலைமையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் தோல்வி தந்த ரணத்தோடு, இந்த உட்கட்சி மோதலும் சேர்ந்துள்ளதால் அறிவாலய வட்டாரம் மிகுந்த பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.
