2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளராகச் சமூகச் செயற்பாட்டாளர் திருநங்கை ச. ரோசினி அவர்களை நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரோஷினி அறக்கட்டளையின் நிறுவனரான இவர், திருநங்கைகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அரசியலில் திருநங்கைகளுக்கான அதிகாரப் பகிர்வை உறுதி செய்யும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் பிரம்மாண்டமான “மக்களின் மாநாடு” நிகழ்ச்சியை நாளை நடத்த நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தாலும், இந்த நிகழ்ச்சியில் அனைத்து வேட்பாளர்களும் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். சமூக சமத்துவம் மற்றும் பாலின நீதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 50% பெண் வேட்பாளர்களைக் களம் இறக்கும் நாதக-வின் இந்த வியூகம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
