கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காளப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தன்னையும் மக்களையும் நம்பாதவர்களே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்று கடுமையாக விமர்சித்தார். “நான் மாஸ், நான் பிளாஸ்ட்” என்று மேடைகளில் வசனம் பேசுபவர்கள், உண்மையான கதாநாயகர்களாக இருந்தால் ஒரு தொகுதியில் மட்டும் நின்று தன்னம்பிக்கையுடன் வெற்றி பெற வேண்டும் என்றும், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது ஜனநாயகத்திற்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தான் ஏற்கனவே இரண்டு முறை தேர்தலில் நின்று தோல்வியடைந்த போதிலும், மூன்றாவது முறையாகவும் தனித்துப் போட்டியிடுவதாகக் குறிப்பிட்ட சீமான், தனது கொள்கைப்படி ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது மக்கள் விரோதச் செயல் என்று சாடினார். கட்சியில் தன்னையும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடச் சொன்னார்கள் என்றும், ஆனால் ஒரு பதவியில் இருந்து கொண்டே மற்றொரு பதவிக்கு ஆசைப்படுவதோ அல்லது இரண்டு இடங்களில் நிற்பதோ தனது கோட்பாட்டிற்கு எதிரானது என்பதால் அதை மறுத்துவிட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.
தங்கள் கட்சி சந்தித்த தோல்விகள் குறித்துப் பேசிய அவர், வரலாற்றில் தங்களைப் போல யாரும் இவ்வளவு பெரிய தோல்விகளைச் சந்தித்திருக்க முடியாது என்று கூறினார். இருப்பினும், அந்தத் தோல்விகள் அனைத்தும் தனது சொந்த மக்களிடமே பெற்றவை என்பதால் அதைப் பெருமையாகக் கருதுவதாகவும், இன்று விமர்சிப்பவர்கள் வருங்காலத்தில் தங்களைக் கொண்டாடும் காலம் வரும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார். எதற்கும் அஞ்சாமல் தனித்துவமான கொள்கைகளுடன் தங்கள் பயணம் தொடரும் என்பதையும் அவர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.
