கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே உள்ள கரம்பவிளை பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான ரெஜினா. இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் பயின்று வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி நகராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணிபுரியும் முகேஷ் (25) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் ரெஜினாவிற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்துத் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.
கல்லூரிக்குச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டு, ரெஜினா தனது காதலன் முகேஷுடன் பல்வேறு இடங்களுக்குச் சுற்றித் திரிந்துள்ளார். இந்தச் சூழலில் ரெஜினா கர்ப்பமடைந்த நிலையில், இந்த விவகாரம் பெற்றோருக்குத் தெரிந்தால் கடும் எதிர்ப்பு கிளம்பும் என அஞ்சி, தனது கர்ப்பத்தை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக மறைத்து வந்துள்ளார். நர்சிங் மாணவி என்பதால், உடல் மாற்றங்களைச் சாமர்த்தியமாக மறைத்துத் தனது அன்றாடப் பணிகளைக் கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெஜினாவிற்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பு படிப்பதால் தனக்குத் தெரிந்த மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, வீட்டுக் கழிவறையிலேயே ரகசியமாகப் பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். இது குறித்து உடனடியாக முகேஷிற்குத் தகவல் தெரிவித்தபோது, அவர் “குழந்தையை எங்காவது வீசிவிட்டு வா, நாம் பிறகு சேர்ந்து வாழலாம்” எனக் கூறியுள்ளார். காதலனின் பேச்சை கேட்டு, பிறந்த பச்சிளம் குழந்தையை ஒரு பையில் போட்டு, பக்கெட்டிற்குள் அடைத்துத் தனது வீட்டின் அருகே இருந்த கோயில் பின்புறம் வீசிச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அந்தப் பகுதியில் இருந்த பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பக்கெட்டைத் திறந்து பார்த்தபோது, பிஞ்சு குழந்தை சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ரெஜினா பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் காதலன் முகேஷின் தூண்டுதலின் பெயரில் இந்தக் கொடூரத்தைச் செய்தது அம்பலமானது. தற்போது இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
