தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இதனிடையே விஜய் சமீபத்தில் ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய போது, எதிரிகள் யார் என்று சொல்லிவிட்டு தான் வந்திருக்கிறோம். அதனால் அவர்களை மட்டும் தான் எதிர்ப்போம். அதுவும் 2026 தேர்தலில் களத்தில் இருப்பவர்களை தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும் களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லாதவர்களையும் எதிர்ப்பதற்கான எந்த ஐடியாவும் இல்லை என்று சீமானை அட்டாக் செய்தார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வாக்குரிமையையே காப்பாற்ற போராட வேண்டிய நிலைதான் தற்போது உள்ளது. உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளனர். மிகவும் குறுகிய காலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடித்துள்ளனர். களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது. களத்திற்கு வராதவர் களத்தைப் பற்றி பேசுவதா? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் நின்றவர் யார்? என்று விஜய்யை நோக்கி சீமான் மறைமுகமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
