உத்தரப் பிரதேச மாநிலம் நோய்டா செக்டார் 39-ல் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அருகே இருக்கும்போதே, அங்கிருந்த பாதுகாப்புக் காவலர் ஒருவர் சிரிஞ்சில் ஊசி மருந்தை நிரப்பும் திடுக்கிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் இது குறித்துத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையின் முடிவில், இதில் தொடர்புடைய பாதுகாப்புக் காவலர் மற்றும் அங்கிருந்த செவிலியர் ஆகிய இருவரையும் மருத்துவமனை நிர்வாகம் பணியில் இருந்து உடனடியாக நீக்கியுள்ளது. மருத்துவ விதிமுறைகளை மீறி தகுதியற்ற நபரைக் கொண்டு ஊசி மருந்து நிரப்ப வைத்த இந்தச் சம்பவம், நோயாளிகளின் பாதுகாப்பு குறித்துப் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், இணையவாசிகளின் கடுமையான கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
