தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளிசந்தை காமராஜபுரத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில், 3 வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் சுமார் 90 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், பள்ளியின் சுற்றுச்சுவர் நீண்ட நாட்களாகவே பலவீனமடைந்து விரிசல்களுடன் காணப்பட்டுள்ளது. இது குறித்துப் பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 25-ம் தேதி காலை பள்ளி நுழைவு வாயில் அருகே விளையாடிக் கொண்டிருந்த தண்டபாணி – அபிராமி தம்பதியரின் 3 வயது மகள் தாரிகா மீது, திடீரெனப் பள்ளியின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிறுமியின் வயிறு மற்றும் இடுப்புப் பகுதி நசுங்கிப் பலத்த காயமடைந்ததையடுத்து, அவர் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதிகாரிகளின் அலட்சியமே ஒரு பச்சிளம் குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ஊர் கவுண்டர் பழனிமுத்து, பள்ளி வேலை நாட்களில் இது போன்ற விபத்து நடந்திருந்தால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாரிகளின் மெத்தனப் போக்கால்தான் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாகவும், இதற்குத் தமிழக அரசு பொறுப்பேற்று உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
