நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்குத் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும், திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு ஆதரவு தெரிவித்த சத்யராஜ், “எனக்குச் சாதி, மதம், சடங்குகளில் உடன்பாடில்லை; திருமணம் என்பது கட்டாயம் கிடையாது” எனக் கூறி மகளின் கருத்தை வழிமொழிந்தார். இந்த விவகாரம் இணையதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில், இயக்குநர் மோகன் ஜி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சத்யராஜின் கருத்தை வன்மையாகக் கண்டித்துள்ள மோகன் ஜி, “நீங்கள் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு, வங்கி இருப்பு மற்றும் சொத்துக்கள் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம்” எனச் சாடியுள்ளார். தற்காலத் தலைமுறையினருக்கு (Gen-Z) பெரியாரியம் குறித்தோ, அதன் கொள்கைகள் குறித்தோ ஆழமான புரிதல் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சத்யராஜ் போன்ற ஒரு பெரிய ஆளுமையின் பேச்சு கோடிக்கணக்கான மக்களைச் சென்றடையும் என்பதால், இத்தகைய கருத்துக்கள் சமூகத்திற்குத் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், திருமணம் இல்லாமல் உறவில் இருந்து குழந்தை பெற்றுக்கொண்டு, பின்னர் பிரிந்துவிட்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று மோகன் ஜி எச்சரித்துள்ளார். தந்தையில்லாமல் ஒரு குழந்தையைத் தனியாக வளர்ப்பது எவ்வளவு கடினமானது என்பதை அந்த நிலையை எதிர்கொண்ட பெண்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், இளைஞர்கள் இதுபோன்ற பேச்சுகளைக் கேட்டுத் தங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் அந்த வீடியோவில் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
View this post on Instagram
