உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாடற்ற வேன் தறிக்கெட்டு ஓடிச் சென்று சர்வீஸ் சாலையின் ஓரத்தில் இருந்த மாபெரும் மரத்தின் மீது பலத்த சத்தத்துடன் மோதி நின்றது. மோதிய வேகத்தில் வேனின் முன்பகுதி நொறுங்கியதுடன், உள்ளே இருந்த பள்ளிச் சிறுவர்கள் பயத்தில் அலறியடித்துக் கூச்சலிட்டனர். அதிர்ஷ்டவசமாக வேன் மரத்தின் மீது மோதி நின்றதால், அருகில் இருந்த பெரிய பள்ளத்திலோ அல்லது மற்ற வாகனங்கள் மீதோ மோதாமல் பேரழிவு தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் வேனில் இருந்த குழந்தைகள் அனைவரும் காயங்களின்றி நல்வாய்ப்பாகப் உயிர் தப்பினர். இந்த பயங்கர விபத்து தொடர்பான நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகித் தீயாய் பரவி வருகின்றன. “அந்த மரம் மட்டும் இல்லையென்றால் பெரிய ரத்தக் களறியே நடந்திருக்கும்” என பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ள நிலையில், சம்பவம் குறித்துப் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
