தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து எஸ் பாஸ் சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.
தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.
புகழ்பெற்ற கதாநாயகனாக ஆகிவிட்ட பிறகு சத்யராஜ் புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்தார். குறைந்தபட்சம் ஒரு படமாவது எடுத்த இயக்குனர்களோடு மட்டுமே பணியாற்றுவது என்ற முடிவில் இருந்துள்ளார். அப்படிதான் இயக்குனர் ஆர் கே செல்வமணியையும் அவர் நிராகரித்துள்ளார். அதன் பின்னர் அவர் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.
அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் ‘போலீஸ் கமிஷனர்’ என்ற படத்தை உருவாக்க இருந்தனர். அந்த படத்தில் ராம்கியும் ஒரு சிறு வேடத்தில் நடிப்பதாக இருந்தது. சத்யராஜ் தான் இப்போது டபுள் ஹீரோ படம் பண்ணுவதில்லை என சொல்ல, ராம்கியின் ஒரு சிறு வேடத்தில்தான் நடிக்கிறார் என செல்வமணி கதையை சொல்லி அவரை சமாதானப்படுத்தியுள்ளார்.
ஆனால் ராம்கி ஆர்வக்கோளாறாக பத்திரிக்கையில் சத்யராஜ் மற்றும் ராம்கி இணைந்து நடிக்கும் போலீஸ் கமிஷனர் என்று விளம்பரம் கொடுத்து விட்டாராம். இதைப் பார்த்த கடுப்பில் சத்யராஜ் அந்த படத்தையே நிறுத்திவிட்டாராம். இதை சமீபத்தில் ஒரு நேர்காணலில் செல்வமணி பகிர்ந்துள்ளார்.
