தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து ‘எஸ் பாஸ்’ சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.
தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.
2005 வரை ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜுக்கு அப்போது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்தார். அந்த முடிவு அவரை இன்று வரை பிஸியான நடிகராக வைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் மட்டும் இல்லாமல் தற்போது இந்தி படங்கள் வரை நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “நான் ஆரம்ப காலத்தில் வில்லனாக நடித்த போது சரியான வாய்ப்புகள் இல்லை. அதனால் எனக்கே நடிப்பில் எதிர்காலம் இருக்குமா என்ற குழப்பத்தில் இருந்தேன். அப்போது நூறாவது நாள் படத்தில் விஜயகாந்த் சாரோடு நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது விஜயகாந்திடம் ‘நான் ஒரு படம் இயக்கலாம் என்றிருக்கிறேன். அதில் நீங்கள் நடியுங்கள்’ என்றேன். அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல், கதை கேட்காமல் நடிக்கிறேன் என்றார்.
ஆனால் நூறாவது நாள் படம் ரிலீஸான பின்னர் நான் ரொம்ப பிஸியான நடிகர் ஆகிவிட்டேன். எனக்கு நிற்கக் கூட நேரம் இல்லை. அதனால் என்னால் அந்த படத்தை பண்ண முடியவில்லை. ஆனால் அந்த கதையை நான் நல்ல காசுக்கு விற்றுவிட்டேன். மணிவண்னன் இயக்கத்தில் சுமன், விஜயசாந்தி நடிப்பில் தெலுங்கில் ‘டர்ஜா டொங்கா’ என்று உருவாகி 100 நாட்கள் ஓடியது” எனக் கூறியது.
