“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” – சி.வி.சண்முகத்தின் கோட்டையை அதிரவைத்த சசிகலாவின் என்ட்ரி… சொந்த மண்ணிலேயே சின்னம்மாவின் ஆட்டம்….!

By Nanthini on பங்குனி 12, 2026

Spread the love

அதிமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்படும் விழுப்புரம் மாவட்டத்தில், அதுவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த தொகுதியான திண்டிவனத்தில் சசிகலா தனது அரசியல் பயணத்தின் அதிரடியான தொடக்கத்தை நிகழ்த்தியுள்ளார். புதிய கட்சி தொடங்கிய பிறகு, முதல் முக்கிய நிகழ்வாக திண்டிவனத்தைத் தேர்ந்தெடுத்தது, தற்செயலான நிகழ்வு அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த வருகை அப்பகுதி அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பையும், ஆளும்கட்சிக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சி.வி.சண்முகத்தின் தீவிர விசுவாசியாக இருந்த முஹம்மது ஷெரீப், தற்போது சசிகலாவின் வட மாவட்ட தளபதியாக உருவெடுத்துள்ளார். அவரது ஏற்பாட்டில் திண்டிவனத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான இப்தார் நோன்பு நிகழ்ச்சி, சி.வி.சண்முகத்தின் சொந்த மண்ணிலேயே சசிகலா காலூன்றியுள்ளது என்பதை உணர்த்தியது. அவருக்கு அளிக்கப்பட்ட பிரம்மாண்டமான வரவேற்பு, உள்ளூர் அதிமுக தலைவர்களிடையே பெரும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

   

நிகழ்ச்சியில் பாரதியாரின் புகழ்பெற்ற வரிகளை மேற்கோள் காட்டி ஆவேசமாக உரையாற்றிய சசிகலா, “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” எனக் கேள்வி எழுப்பினார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் பயணிப்பதாகக் குறிப்பிட்ட அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிரிகளையும், துரோகிகளையும் வேரறுத்து வெற்றி வாகை சூடுவோம் என்று சூளுரைத்தார். எத்தகைய சோதனைகள் வந்தாலும் கழகத் தொண்டர்களின் துணையோடு தமிழக மக்களின் நலன் காப்போம் என்று அவர் உறுதி அளித்தார்.

   

சசிகலாவின் இந்த அதிரடி “மூவ்”, சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. குறிப்பாக, “துரோகிகளை வேரறுப்போம்” என்று அவர் குறிப்பிட்டது, அதிமுகவின் தற்போதைய முக்கியத் தலைவர்களைக் குறிவைத்தே சொல்லப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்வின் மூலம் விழுப்புரம் மாவட்ட அரசியலில் புதியதொரு போரைத் தொடங்கி வைத்துள்ள சசிகலா, வரும் நாட்களில் வட மாவட்ட அதிமுக அரசியலில் பல மாற்றங்களை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.