சமீபத்திய அரசியல் நகர்வுகளின்படி, சசிகலா தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபர் மூலமாக சசிகலாவிடம் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின் போது, சசிகலா தரப்பிலிருந்து ஒரு முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, தன்னுடன் இருக்கும் பள்ளிப்பட்டு நரசிம்மன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆனந்தன் ஆகியோருக்கு வரவிருக்கும் தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று சசிகலா நிபந்தனை விதித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த கோரிக்கைக்கு ஈபிஎஸ் தரப்பிலிருந்து உடனடிப் பச்சைக்கொடி காட்டப்படவில்லை எனத் தெரிகிறது. சசிகலாவின் நிபந்தனையைக் கேட்ட எடப்பாடி பழனிசாமி, “முதலில் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அதிகாரப்பூர்வமாக கடிதம் வழங்கட்டும், அதன் பிறகு தொகுதிகள் மற்றும் வேட்பாளர் நிறுத்துவது குறித்துப் பேசிக்கொள்ளலாம்” என்று கறாராகப் பதிலளித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், சசிகலாவை நேரடியாகக் கட்சிக்குள் சேர்ப்பதை விட, ஒரு கூட்டணியாகப் பெற்றுக்கொள்ளும் முடிவில் ஈபிஎஸ் உறுதியாக இருப்பது வெளிப்படுகிறது. இந்த காய்நகர்த்தல்கள் தமிழக அரசியலில், குறிப்பாக அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
