தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (பிப். 08) மாற்றமின்றி ஒரு சவரன் ₹1,15,360-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹1,840 உயர்ந்து ₹1,17,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹230 அதிகரித்து ₹14,650-ஆக உயர்ந்துள்ளது. திருமண முகூர்த்த நாட்கள் நெருங்கி வரும் வேளையில், இந்தத் திடீர் விலை ஏற்றம் நடுத்தரக் குடும்பத்தினரிடையே கவலையை உருவாக்கியுள்ளது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹15 உயர்ந்து ₹300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹15,000 அதிகரித்து, தற்போது ₹3,00,000-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு போன்ற காரணங்களால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருவதாகச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
