விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இப்படத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ், சரத்குமார், பிரியா பவானி சங்கர், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இன்பினிட்டி பிலிம் ப்ரொடெக்ஷன் கீழ் கமல் போஹ்ரா மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியான உடனேயே இயக்குனர் விஜய் மில்டன் ஒரு பரபரப்பான வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியது என்னவென்றால், இந்த படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறேன். இந்த படத்தில் ஹீரோ எங்கிருந்து வருவார்? எப்படி வருவார்? எதற்காக வருவார்? போன்ற கேள்விகளை சஸ்பென்ஸ் ஆக வைத்தேன். இது இந்த படம் முழுவதும் பயணமாகும். இறுதியில் அந்த சஸ்பென்ஸ் உடைக்கப்படும். அப்படித்தான் நான் படத்தை இயக்கியிருந்தேன்.

ஆனால் இப்போது தியேட்டர்களில் ரிலீசான பிறகு படத்தின் ஆரம்பத்தில் ஒரு நிமிட காட்சியை இணைத்திருக்கிறார்கள். அதில் ஹீரோவை பற்றி ஒரு முன்னோட்டத்தை சொல்லி இருக்கிறார்கள். அந்த ஒரு நிமிட காட்சியை பார்த்து விட்டால் பிறகு படம் முழுவதும் நான் பட்ட கஷ்டங்கள் எதுவுமே பெரிய பலன் இல்லாமல் போய்விடும். முதலிலேயே சஸ்பென்ஸ் உடைக்கப்பட்டால் மக்களுக்கு சுவாரசியம் இல்லாமல் போய்விடும். இந்த ஒரு நிமிட காட்சியை யார் படத்தில் இணைத்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கே தெரியாமல் ஒரு நிமிட காட்சியை படத்தில் இணைத்துள்ளார்கள் என்று அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் ஆனது இணையவாசிகளுக்கிடையே பேச்சு பொருளாக மாறியது. படம் எடுத்த இயக்குனருக்கு தெரியாமல் எப்படி காட்சிகளை இணைத்தார்கள் என்று பேசி வந்தனர். இந்நிலையில் இன்று விஜய் மில்டன் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இன்று வெளியிட்ட வீடியோவில் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கு மக்களாகிய நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி. நிறைய நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் சொல்றீங்க கேட்பதற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் எனக்கே தெரியாமல் ஒரு நிமிட காட்சியை வைத்திருக்கிறார்கள் என்று சொன்னேன். இப்போது அந்த காட்சி நீக்கப்பட்டுவிட்டது.

அந்த ஒரு நிமிட காட்சியை நீக்குவதற்கு மிக முக்கியமான காரணம் சரத்குமார் சார் தான். அவர்தான் எனக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நடுவில் இரண்டு பக்கமும் பொதுவாக பேசி இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உதவி செய்து இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார். அவர் இல்லை என்றால் இது சாத்தியமே இல்லை.சரத் சார் நீங்கள் செய்த இந்த பெரிய உதவிக்கு ரொம்ப நன்றி. உங்கள் பேச்சை எப்பவும் நாங்கள் மீறவே மாட்டோம் என்று கூறி நெகிழ்ச்சியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இயக்குனர் விஜய் மில்டன்.
