நாத்தம் அடிக்குது..! “நாங்கள் சோத்துக்கு அடிமையில்லை” காலை உணவுத் திட்டத்தால் வியாதி தான் வருது… நெல்லையில் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்..!!

By Soundarya on தை 31, 2026

Spread the love

திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள தச்சநல்லூர் மண்டலத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தமிழக அரசு வழங்கும் காலை உணவுத் திட்டம் தங்களுக்குப் பெரும் உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறி கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உணவைச் சாப்பிட்ட சில நாட்களில் தங்களுக்கு வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு போன்ற உபாதைகள் ஏற்பட்டதாகவும், உணவு கெட்டுப்போய் துர்நாற்றம் வீசுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதன் அடையாளமாக, தங்களுக்கு வழங்கப்பட்ட உப்புமா மற்றும் பொங்கலை அவர்கள் பொது இடத்திலுள்ள குப்பைத்தொட்டியில் கொட்டித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

தற்போது நாள் ஒன்றுக்கு 540 ரூபாய் மட்டுமே ஊதியமாகப் பெறும் ஊழியர்கள், அதனை 700 முதல் 800 ரூபாய் வரை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே தங்களது பிரதான கோரிக்கை என்று தெரிவித்தனர். “நாங்கள் முறையான ஊதிய உயர்வைக் கேட்டால், அதற்குப் பதிலாக அரசாங்கம் எங்களுக்குத் தரமற்ற உணவை வழங்குகிறது; நாங்கள் உணவுக்காக அடிமைகள் அல்ல” என்று அவர்கள் ஆவேசமாகக் கூறினர். மேலும், பல ஆண்டுகளாகத் தற்காலிகப் பணியாளர்களாகவே இருந்து வரும் தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்