நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான குடும்பப் பிரச்சனை தற்போது தமிழக அரசியலிலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட நடிகையுடனான தொடர்பு குறித்த தகவல்கள் அந்த மனுவில் இடம் பெற்றிருப்பது விஜய்க்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்படும் விஜய்க்கு, இந்தச் செய்தி பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது. பெண்களின் வாக்குகள் வெற்றியின் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்பதால், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் இந்த விவகாரத்தைச் சமாளிக்க விஜய் தரப்பு தற்போது ‘டேமேஜ் கண்ட்ரோல்’ பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக, அந்த நடிகையின் பெயரைச் சங்கீதா பகிரங்கமாக வெளியிடாமல் இருக்க அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகப் பெரியவர்கள் மூலம் லண்டனில் இருக்கும் சங்கீதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சட்டரீதியாக மோதுவதை விட, பரஸ்பரம் பேசி ஒரு சுமூக முடிவுக்கு வருவதே நல்லது என்று விஜய் தரப்பு கருதுகிறது. மேலும், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஐடி விங் தொண்டர்கள் யாரும் இந்த விவகாரம் குறித்துச் சமூக வலைதளங்களில் தேவையில்லாமல் கருத்துச் சொல்லக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சித் தலைமை எச்சரித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் விஜய் நேரில் ஆஜராக வேண்டிய சூழல் இருப்பதால், அதற்கு முன்னதாகவே இந்தச் சிக்கலைத் தீர்க்கப் பகீரதப் பிரயத்தனம் செய்யப்பட்டு வருகிறது. அமைதியான சுபாவம் கொண்ட சங்கீதா, இத்தனை கடுமையான முடிவை எடுத்திருப்பது விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்குச் சவாலாக மாறியுள்ளது. விஜய்யின் இந்தச் சமாதானத் தூது பலன் அளிக்குமா அல்லது சங்கீதா தனது முடிவில் உறுதியாக இருப்பாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
