“காரில் பிணம்… கதறிய மனைவி”… ஒரே நாளில் போட்டுக்கொடுத்த ரத்தக் கறை…. ஓமலூர் தொழிலதிபர் கொலையில் அம்பலமான கொடூரம்….!

By Nanthini on புரட்டாதி 3, 2026

Spread the love

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலக்கவுண்டனூரைச் சேர்ந்த சிமெண்ட் செங்கல் வியாபாரி பூபதி என்பவர், வழிப்பறி கொள்ளையர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் மகனுக்கு எந்திரம் கட்டுவதற்காக காரில் சென்றபோது, ஆட்டுக்காரனூர் சரபங்கா ஆற்றுப் பாலம் அருகே மர்ம நபர்கள் பூபதியை வெட்டிக்கொலை செய்துவிட்டு, தனது 10 பவுன் நகையைப் பறித்துச் சென்றுவிட்டதாக அவரது மனைவி சுஜிதாஸ்ரீ காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமலூர் போலீசார் பூபதியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் வெட்டுக்காயங்கள் அல்லது ரத்தக் கரைகளுக்கான தடயங்கள் ஏதும் இல்லாததும், சுஜிதாஸ்ரீக்கு சிறு காயம் கூட ஏற்படாததும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், சந்தேகத்தின் பேரில் அவர்களின் வீட்டிற்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு ரத்தக் கரைகள் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. இதையடுத்து, சுஜிதாஸ்ரீயிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைத் திட்டமிட்டுப் படுகொலை செய்துவிட்டு நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

   

சுஜிதாஸ்ரீயின் வீட்டிற்கு எதிரே வசித்து வரும் திருமணமாகாத ஐடி ஊழியரான சந்தோஷ்ராஜ் (33) என்பவருடன் அவருக்குக் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. விஷயம் பூபதிக்குத் தெரியவந்ததால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஆத்திரமடைந்த சுஜிதாஸ்ரீ, சந்தோஷ்ராஜை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து பூபதியைத் தலையணையால் அமுக்கிக் கொல்ல முயன்றபோது அவர் திமிறியுள்ளார். உடனே சுஜிதாஸ்ரீ அரிவாள் மனையாலும், சந்தோஷ்ராஜ் கத்தியாலும் பூபதியைச் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

   

கொலைக்குப்பின் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க அதிகாலை 4 மணி வரை காத்திருந்த இருவரும், பூபதியின் சடலத்தை காரின் முன்சீட்டில் படுக்க வைத்துள்ளனர். சுஜிதாஸ்ரீ தனது குழந்தைகளுடன் பின்சீட்டில் அமர, சந்தோஷ்ராஜ் காரை ஓட்டிச்சென்று ஆட்டுக்காரனூர் ஆற்றுப் பாலத்திற்கு அருகே நிறுத்தியுள்ளார். அங்குத் தான் அணிந்திருந்த நகைகளைக் கழற்றிச் சந்தோஷ்ராஜிடம் கொடுத்து அனுப்பிவிட்டு, வழிப்பறி நடந்ததாக நாடகமாடியுள்ளார். உண்மையைக் கண்டறிந்த ஓமலூர் போலீசார், சுஜிதாஸ்ரீ மற்றும் அவரது கள்ளக்காதலன் சந்தோஷ்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.