தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தமிழகத்தில் தங்க நாணயங்கள் விற்பனையை உடனடியாக நிறுத்திக் கொள்வதாக அதிரடியாக அறிவித்துள்ளது. இத்துடன், தங்கச் சேமிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட நகை ஊக்குவிப்புத் திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களும் உடனடியாக நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் மீதான இறக்குமதி வரியை 15 விழுக்காடாக உயர்த்திய முடிவை முழுமையாக வரவேற்பதாக இச்சங்கங்களின் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாகப் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் இந்த வரி உயர்வு தங்கம் இறக்குமதியைக் குறைக்கப் பெரிதும் உதவும் என்றும், அதற்குத் தங்களின் முழு ஒத்துழைப்பை நல்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சம்மேளனத்தின் தலைவர் பி.சபரிநாத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தொழிலைச் சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தங்கம் சார்ந்த இ.டி.எஃப் (ETF) மற்றும் டிஜிட்டல் தங்கம் (Digital Gold) போன்ற திட்டங்களுக்கும் மத்திய அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
