வாழ்க்கையில் முதுமையையே பார்க்கவில்லை… ஆனால் சினிமாவில் அவர் இளமையாக நடித்ததேயில்லை –நடிகர் ரங்காராவ் பற்றிய சுவாரஸ்ய தகவல்!

By vinoth on ஜூலை 27, 2024

Spread the love

தமிழ் சினிமா உருவாக்கிய மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் எஸ் வி ரங்காராவ். ஆந்திராவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் உச்சரிப்பில் பிசிறு தட்டாமல் பேசி நடிக்கக் கூடியவர். தன் இளம் வயதிலேயே முதிய கதாபாத்திரங்களாக அவருக்கு அமைந்துவிட்டன. அதனால் அவரை வயதான நபராகவே ரசிகர்கள் மனதில் பதியவைத்துவிட்டனர் தமிழ் சினிமா இயக்குனர்கள்.

தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் நடித்து வந்த எஸ் வி ரங்காராவ் மிகச்சிறந்த நடிகராக இருந்த போதும் அவரை வைத்து ஷூட் செய்வது அவ்வளவு எளிதில்லையாம். பயங்கர கோபக்காரரான அவர் பல இடைஞ்சல்களை படக்குழுவினருக்குக் கொடுப்பாராம். அதில் முக்கியமான ஒன்று வெளிப்புற ஷூட்டிங்குக்கு அவர் வரமாட்டாராம். அது ஒன்றுதான் அவர் பற்றி சினிமா உலகில் சொல்லப்படும் குறையாக அமைந்தது, அது சரி குறையே இல்லாத மனிதன்தான் யார்?

   

தமிழ் சினிமாவில் 1950 களிலேயே அறிமுகமாகி விட்டார் ரங்காராவ். அவர் அறிமுகம் ஆனபோதே அவருக்கு அப்பா, மாமா, தாத்தா வேடம்தான் கொடுக்கப்பட்டது. கதாநாயகனுக்கு அப்பா வேடமா கூப்பிடு ரங்காராவை என்பதுதான் அப்போது கதைவிவாதக் குழுவில் பேசப்பட்ட ஒன்றாக இருந்திருக்கும். அந்த அளவுக்கு அப்பா கதாபாத்திரங்களில் நடித்து ஒரு முதிர்ந்த வயதான நபராகவே அவர் மக்கள் மனதில் பதிந்துள்ளார்.

   

20 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நடிகராக இருந்த ரங்காராவ் 74 ஆம் ஆண்டு ஆண்டு காலமானார். அப்போது அவருக்கு வயது என்ன தெரியுமா? 54தான். தன் வாழக்கையில் முதுமையையே பார்க்காத அவர், தான் நடித்த வேடங்களில் இளமையான வேடம் ஒன்றைக் கூட நடித்ததில்லை என்பதுதான் நகை முரண்.