தமிழக அரசியலில் எப்போதும் இல்லாத ஒரு விசித்திரமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்று, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. பொதுவாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சிக்கு வரும் என்பதால், தங்களுக்கு எப்படியும் அதிகாரம் கிடைக்கும் என இரு தரப்பினரும் பொறுமை காப்பது வழக்கம். ஆனால், கடந்த தேர்தலில் தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுக – திமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படும் தகவல் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எம்ஜிஆரால் திமுகவுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட அதிமுக, கொள்கை முரண்பாடான இந்த முடிவை எடுத்ததால் அதிருப்தியடைந்த பல முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறி தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இந்த அரசியல் மாற்றத்தின் அலையாக மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு வரும் இடைத்தேர்தலில் முதல்வர் விஜய் மீண்டும் வாய்ப்பளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருக்கும் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் தவெகவில் இணையலாம் என அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தவெகவில் இணைக்க தீவிர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அவர் இதுவரை அதற்குப் பிடிகொடுக்காமல் இழுபறி நீடித்து வருகிறது.
அதிமுகவிலும் நீடிக்காமல், தவெகவிலும் இணையாமல் எஸ்.பி.வேலுமணி முற்றிலும் ஒரு ‘புது ரூட்டை’ தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அண்ணாமலையின் புதிய இயக்கத்திற்குப் பெருகி வரும் ஆதரவைக் கவனித்து வரும் அவர், தவெகவில் சென்று பத்தோடு பதினொன்றாக இருப்பதை விட, அண்ணாமலையின் கட்சியில் இணைந்து ஒரு முக்கியப் பதவியுடன் கௌரவமாகச் செயல்படலாம் என யோசித்து வருகிறாராம். விரைவில் மாநாடு நடத்தி, தமிழகம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் அண்ணாமலையின் புதிய கட்சி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டால், அதிமுகவிலிருந்து மேலும் பல விக்கெட்டுகள் அங்கு விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், அண்ணாமலையே அதிமுகவில் இணையப் போகிறார் என்ற சில உறுதிப்படுத்தப்படாத வதந்திகளும் மறுபுறம் உலா வருகின்றன. ஆனால், புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ள அண்ணாமலை ஏன் அதிமுகவிற்குச் செல்ல வேண்டும் என்ற கேள்வியே இதன் நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. அன்று அதிமுகவிலிருந்து விலகிய மூத்த தலைவர் செங்கோட்டையன் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் ஊகிக்காத வகையில் தவெகவில் இணைந்து இன்று அமைச்சராகவும், அவை முன்னவராகவும் கம்பீரமாக வலம் வருகிறார். அன்று புதிய கட்சியாக இருந்த தவெக இன்று ஆளுங்கட்சியாக மாறியுள்ள நிலையில், மூத்த முன்னோடி செங்கோட்டையனின் வழியைப் பின்பற்றி வேலுமணியும் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைந்து புது வரலாறு படைப்பாரா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.
