அதிமுகவில் அதிரடி நீக்கம்: லீமா ரோஸ் மார்ட்டின் பதவி மட்டும் தப்பியது ஏன்?
தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைத்துள்ள நிலையில், நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு அதிமுகவில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையைத் மீறி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த உட்கட்சி மோதலால் அதிருப்தியடைந்த எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு எதிராகச் செயல்பட்ட முக்கிய நிர்வாகிகள் மீது நள்ளிரவில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 மாவட்டச் செயலாளர்களின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும், அதிமுகவின் நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்துள்ள பழனிசாமி, பல்வேறு தொகுதிகளை ஒன்றிணைத்து மாவட்டங்களின் எண்ணிக்கையை 17-ஆகக் குறைத்து புதிய செயலாளர்களையும் நியமித்துள்ளார். நீண்டகாலமாக கட்சியில் செல்வாக்கு செலுத்தி வந்த முன்னாள் அமைச்சர்களின் பதவிகள் ஒரே நாளில் பறிக்கப்பட்டது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்.எல்.ஏக்களில் ஒருவரான லீமா ரோஸ் மார்ட்டினின் கட்சிப் பதவி மட்டும் பறிக்கப்படாதது தற்போது அரசியல் களத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. லால்குடி தொகுதியில் வெற்றி பெற்ற இவர், அதிமுக மாநில மகளிர் அணி இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். எஸ்.பி. வேலுமணியின் ஏற்பாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்த இவருக்கு, சேர்ந்த ஒரே வாரத்திலேயே முக்கியப் பதவி வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தனது நம்பிக்கைக்குரியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த நிலையில், லீமா ரோஸ் மீது மட்டும் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
லீமா ரோஸ் மார்ட்டினின் குடும்பப் பின்னணி இந்த விவகாரத்தில் முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது. லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியான இவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா, தற்போதைய தவெக ஆட்சியில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். மேலும், இவரது மகன் ஜோ சார்லஸ் புதுச்சேரியில் எம்.எல்.ஏவாக உள்ளார். இத்தகைய வலுவான அரசியல் மற்றும் குடும்பத் தொடர்புகள் காரணமாகவே, கட்சித் தலைமையின் முடிவை எதிர்த்து வாக்களித்த பிறகும் லீமா ரோஸ் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறாரா என்ற விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் அதிமுக தொண்டர்களாலேயே முன்வைக்கப்பட்டு வருகின்றன.
