இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் வில்லன் நடிகராக வலம் வருகிறார் எஸ் ஜே சூர்யா. அவர் வில்லனாக நடித்த மாநாடு, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களின் அவரின் மிரட்டலான நடிப்புக்காகவே பாராட்டப்பட்டன. இதையடுத்து இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார்.
தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு வந்த எஸ் ஜே சூர்யா முதலில் பாரதிராஜா மற்றும் இயக்குனர் வசந்த் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அஜித் ஆசை படத்தில் நடிக்கும் அதில் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ் ஜே சூர்யாவின் அர்ப்பணிப்பை பார்த்துவிட்டு அவருக்கு தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.

இயக்குனர் ஆவதற்கு முன்பு எஸ் ஜே சூர்யா பாரதிராஜா, ஜி எம் குமார், வசந்த் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக வேலை செய்துள்ளார். அதன் பின்னர் வாலி படத்தை இயக்கி அஜித்துக்கு ஒரு சூப்பர் ஹிட்டைக் கொடுத்தார். அந்த படம் அவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படம் முடிந்ததுமே விஜய்யை வைத்து குஷி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த படம் ஹிட்டானதால் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்தார்.
அதன் பின்னர் நியூ படத்தின் மூலம் நடிகர் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவின் பரபரப்பான நடிகராக இருக்கிறார். நடிகரான பின்னர் அவர் அதிகமாகப் படங்களை இயக்கவில்லை. கடைசியாக இசை என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்விப் படமாக அமைந்தது,
இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அவர் கில்லர் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் ஒரு சூப்பர் காரைப் பற்றிய படம் என சொல்லப்படுகிறது. இந்த படம் பற்றி பேசியுள்ள எஸ் ஜே சூர்யா “நியூ படத்தின் இரண்டாம் பாகம் போல இந்த படம் இருக்கும்” எனக் கூறியுள்ளார். ஜனவரியில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
