தவெக கூட்டணியில் அமைச்சராகப் பதவியேற்றுள்ள வன்னிஅரசுக்கு பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் எஸ்.ஜி.சூர்யா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அதே வேளையில், அவரது அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்து கடுமையான கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த காலங்களில் நடிகர் விஜய்யை ஒரு ஊழல்வாதி என்று வன்னிஅரசு பக்கம் பக்கமாக அறிக்கை விட்டு மிகக் கடுமையாக விமர்சித்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அந்தப் பழைய அறிக்கைகளின் இறுதியில் “நடிகர் விஜய்யின் ஊழல் கதை தொடரும்” என்று வன்னிஅரசு சீறியிருந்ததையும் அவர் தற்போதைய சூழலோடு ஒப்பிட்டுத் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இந்தக் கடந்தகால விமர்சனங்களை நினைவூட்டிய எஸ்.ஜி.சூர்யா, “அன்று ஊழல்வாதி என்று நீங்கள் குற்றம் சாட்டிய அதே விஜய்யின் அமைச்சரவையில், இன்று எந்தவித தயக்கமுமின்றி பவ்யமாக அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்” என்று சாடியுள்ளார். தவெக அமைச்சரவையில் இடம் கிடைத்தவுடன், விஜய்க்கு எதிராக நீங்கள் முன்பு முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கொள்கைகள் எல்லாம் இப்போது காற்றில் பறந்துவிட்டதா என்றும் அவர் நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த அரசியல் விமர்சனப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் அரசியல் வட்டாரத்தினரிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
