1400 அடி உயரத்தில் மரண பயத்தை காட்டிய ஜோடி…. கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி… எம்பயர் ஸ்டேட் கட்டிட உச்சியில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

By SATHISH R on ஆடி 2, 2026

Spread the love

நியூயார்க்கின் உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சட்டவிரோதமாக ஏறி, ஆபத்தான முறையில் தங்களது திருமண நிச்சயதார்த்தத்தை கொண்டாடிய ரஷ்ய ஜோடியை நியூயார்க் நகர போலீசார் கைது செய்துள்ளனர். புதன்கிழமை மதியம் அரங்கேறிய இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியாகி தற்போது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் ஏஞ்சலா நிகோலாவ் மற்றும் இவான் பீர்கஸ் என்ற புகழ்பெற்ற ரஷ்ய சாகச தம்பதியினர் ஆவர். இவர்கள் தரைமட்டத்திலிருந்து சுமார் 1,454 அடி (443 மீட்டர்) உயரத்தில் உள்ள கட்டிடத்தின் தடைசெய்யப்பட்ட ஆண்டெனா பகுதி வரை ஏறியுள்ளனர். அங்கு ஒரு குறுகிய விளிம்பில் நின்றுகொண்டு, “அதிகாரத்தின் மீதான காதல் அழியும் போது, உலகம் அமைதியை அறியும்” என்ற வாசகம் அடங்கிய கருப்பு நிற பதாகையை ஏந்தியவாறு இருவரும் கட்டிப்பிடித்து தங்களது காதலை வெளிப்படுத்தினர். அதன் பிறகு, இவான் முழங்காலிட்டு ஏஞ்சலாவிடம் தனது திருமண விருப்பத்தை தெரிவிக்க, அவரும் அதற்கு சம்மதித்து முத்தமிட்டுள்ளார்.

   

இந்த ஆபத்தான செயலைக் கண்ட பாதுகாப்புப் படையினர், ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தம்பதியரின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர். அவர்கள் கீழே இறங்கி வந்தவுடன் நியூயார்க் போலீசார் அவர்களை அதிரடியாகக் கைது செய்தனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக அத்துமீறி நுழைதல் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படுதல் (Reckless Endangerment), குற்றவியல் வரம்பு மீறல் மற்றும் பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

   

இந்த தம்பதியினர் ஏற்கனவே உலகெங்கிலும் உள்ள வானளாவிய கட்டிடங்களின் மீது எவ்வித பாதுகாப்பும் இன்றி ஏறி சாகசம் செய்வதில் பிரபலமானவர்கள். இவர்களது ஆபத்தான காதல் மற்றும் சாகசப் பயணத்தை மையமாகக் கொண்டு கடந்த 2024 ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் “ஸ்கைவாக்கர்ஸ்: ஏ லவ் ஸ்டோரி” என்ற ஆவணப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் யாருக்கும் காயமின்றி முடிந்தாலும், 9/11 தாக்குதலுக்குப் பிறகு இவ்வளவு பலத்த பாதுகாப்பு கொண்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தின் உச்சிக்கு இவர்கள் எப்படி நுழைந்தார்கள் என்ற பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.