தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக மேலும் 10 கூடுதல் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். இளைஞர்களைக் கவரும் வகையில், வேலைக்குச் செல்லும் 10 லட்சம் இளைஞர்கள் புதிய இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு தலா ரூ.10,000 மானியம் வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இளைஞர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அரசு வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவர்களின் நலன் கருதி, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குச் சிறப்பு வழிகாட்டுதல்களை வழங்க ‘சிறப்பு கவுன்சிலிங்’ மையங்கள் அமைக்கப்படும் என்றும் இபிஎஸ் உறுதி அளித்துள்ளார். இவை தவிர, கல்விக்கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை உயர்வு போன்ற வாக்குறுதிகளுடன் இந்த கூடுதல் அறிவிப்புகளும் இணைந்துள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், அதிமுகவின் இந்த “கடைசி நேர அதிரடி” மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
