கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சம்பவத்தன்று பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த அவர், தனது பாட்டிக்குத் தெரியாமல் வீட்டின் பின்பக்கமாகச் சென்று இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த மரணம் குறித்து மாணவனின் தாயார் அளித்த புகாரில், சக மாணவியிடம் பேசியதற்காக ஆசிரியர்கள் கடுமையாகக் கண்டித்ததால்தான் தனது மகன் மன உளைச்சலுக்கு ஆளாகித் தற்கொலை செய்துகொண்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே, ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவனின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துச் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், சக மாணவர்களும் போராட்டத்தில் குதித்ததால் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இருப்பினும், போலீஸார் நடத்திய விசாரணையில் தற்கொலைக்கான உண்மைக் காரணம் தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவன், தன்னுடன்பயிலும் மாணவியுடன் வெளியே சென்றபோது பேருந்தில் வைத்து நெருக்கமாக எடுத்த வீடியோ ஒன்றை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். இதுகுறித்து ஆசிரியர்கள் விசாரித்ததையடுத்து, அந்த மாணவி மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகே மாணவன் தற்கொலை செய்துகொண்டதும், அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருவதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
