மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய ஏழைப் பெண்களுக்கான திருமண நிதி உதவி திட்டமான தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு தங்க நாணயங்களை வாங்குவதற்கான டெண்டர் கோரி உள்ளது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் ஒரு பகுதியாக ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி தொகையுடன் எட்டு கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது.
இதனால் ஏராளமான பெண்கள் பயனடைந்து வந்த நிலையில் இந்த திட்டம் சில வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் நிறுத்தப்பட்டதால் திமுக அரசை அதிமுக கடுமையாக விமர்சித்து வந்தது. இந்நிலையில் பெண்களுக்கான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் செயல்படுத்த உள்ளது. தற்போது தங்கத்தின் விலை கிராமுக்கு பத்தாயிரம் ரூபாய் தாண்டி உள்ள நிலையில் செயல்பாட்டில் உள்ள நான்கு திருமண நிதி உதவி திட்டங்களில் 22 கேரட் ஒரு சவரன் தங்கம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது
