தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளைப் பெறுவதற்காகப் புதிய ரேஷன் அட்டை கோரி சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் விண்ணப்பித்திருந்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தல் காரணமாக கடந்த 6 மாதங்களாக புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்பொழுது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு இந்த விண்ணப்பங்களை தீவிரமாகச் சரிபார்த்து, அதில் முதற்கட்டமாக ஆவணங்கள் சரியாக உள்ள 45,000 பயனாளிகளுக்குப் புதிய ரேஷன் கார்டுகளை அச்சிட்டுத் தயார் செய்துள்ளது. இப்புதிய குடும்ப அட்டைகளை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் தகுதிவாய்ந்த 45,000 பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்படவுள்ளன. மேலும், முதலமைச்சர் விஜய் இன்று மதியம் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைப்பதுடன், மாநகரப் போக்குவரத்துக் கழக (MTC) பேருந்து பணிமனையையும் நேரில் பார்வையிட்டு அங்கு தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார். உணவுப் பொருட்கள் வாங்குவதற்கும் முக்கிய அடையாளச் சான்றாகவும் விளங்கும் இந்த ரேஷன் அட்டைகள் விநியோகம், விடுபட்ட பிற விண்ணப்பதாரர்களுக்கும் சரிபார்ப்புப் பணிகள் முடிந்தவுடன் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
