டெல்லியில் ‘ராபிடோ’ ஆட்டோவில் பயணித்த பெண் ஒருவர், வாகனத்தை இயக்கும் போதே ஆட்டோ ஓட்டுநர் தனது கைபேசியில் ஆபாச வீடியோ பார்த்ததாக பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். பயணித்துக்கொண்டிருந்த போதே ஓட்டுநர் கைபேசியைப் பயன்படுத்தியதைக் காட்டும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தான் சந்தித்த இந்த மோசமான அனுபவத்தைப் பயணித்த பெண் சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஆதாரத்துடன் பகிர்ந்துள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் இந்த செயல் தனது பாதுகாப்பிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும், பயணத்தின் போது தான் மிகவும் அசௌகரியமாகவும் பயமாகவும் உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற பொறுப்பற்ற நடத்தைகள் குறித்து அவர் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, செயலி வழி ஆட்டோ/டேக்ஸி சேவை நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு உறுதி செய்யப்படுகிறது என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இதுபோன்ற நிறுவனங்கள் ஓட்டுநர்களை வேலைக்கு எடுக்கும் போது கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
