பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தற்போது கடும் மன உளைச்சலில் இருப்பதாகக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பாமக தொடங்கப்பட்ட காலம் முதல் திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி அமைத்தும், சில நேரங்களில் தனித்துப் போட்டியிட்டும் ஒரு நிலையான வாக்கு வங்கியை ராமதாஸ் தக்கவைத்திருந்தார். ஆனால், அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பறிபோனதுடன், கட்சியின் பிடியும் தன் கையை விட்டுச் சென்றுவிட்டதாகத் தனது நெருங்கிய வட்டாரத்தில் ராமதாஸ் புலம்பி வருவதாகக் கூறப்படுகிறது.
கூட்டணி விவகாரத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் இணையலாம் என்று ராமதாஸ் கருதினாலும், கட்சியின் சின்னம் தொடர்பான சிக்கல்கள் தடையாக உள்ளன. அதேசமயம், அதிமுக கூட்டணியில் கணிசமான இடங்களைப் பெற்று இணையலாம் என்ற ராமதாஸின் முடிவை அன்புமணி ராமதாஸ் தடுத்து வருவதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், வரும் தேர்தலில் அன்புமணி மற்றும் அதிமுக போட்டியிடும் வட தமிழகத் தொகுதிகளில் பாமக-வின் மாற்று வேட்பாளர்களைக் களமிறக்கி, மகனுக்கே சவால் விடத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அரசியல் மோதலின் எதிரொலியாகவே, தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், “கூட்டணி தொடர்பாக அய்யா (ராமதாஸ்) என்ன சொல்கிறாரோ, அதன்படி நடப்போம்” என்று மட்டும் கூறி மழுப்பியுள்ளார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்னும் ராமதாஸின் பக்கமே நிற்பதை இது காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மகனின் தன்னிச்சையான முடிவுகளால் அதிருப்தியில் உள்ள ராமதாஸ், இந்தத் தேர்தலில் அன்புமணிக்கு ஒரு பாடம் புகட்டத் தீவிரமாக இறங்கியுள்ளது பாமக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
