“இஸ்ரேல் – ஈரான் போர்”…. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வந்த புது ஆபத்து…. டிஜிட்டல் உலகமே நடுநடுங்கும் ‘சைபர் வார்’….!

By Nanthini on பங்குனி 7, 2026

Spread the love

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே மூண்டுள்ள போர், வெறும் ஆயுதப் போராக மட்டும் இல்லாமல் டிஜிட்டல் உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. களத்தில் ஏவுகணைகள் பாய்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில், இணையவெளியில் சைபர் தாக்குதல்களும் (Cyberattacks) பன்மடங்கு தீவிரமடைந்துள்ளன. இந்த இணையப் போரின் தாக்கம் இந்திய நிறுவனங்களையும் வெகுவாகப் பாதிக்க வாய்ப்புள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தற்போது எச்சரித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் நடக்கும் இந்த டிஜிட்டல் போரினால், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. குறிப்பாக, ஈரானிய ஆதரவு பெற்ற ஏபிடி (APT) குழுக்கள் மற்றும் ஹேக்டிவிஸ்ட் (Hacktivist) அமைப்புகளால் இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு மறைமுகமாக குறிவைக்கப்படலாம் என ‘CloudSEK’ என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவின் ஐடி நிறுவனங்கள், நிதி அமைப்புகள் மற்றும் டெலிகாம் நெட்வொர்க்குகள் மீது டிடோஸ் (DDoS) மற்றும் ரான்சம்வேர் (Ransomware) உள்ளிட்ட அதிநவீனத் தாக்குதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

   

சமீபத்தில், இஸ்ரேல் நாடு ஈரான் மீது வரலாற்றில் மிகப்பெரிய சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது. இதன் காரணமாக ஈரானில் இணைய சேவை பெருமளவு துண்டிக்கப்பட்டதுடன், அரசு சேவைகள், எரிசக்தி மற்றும் விமானப் போக்குவரத்து உள்ளிட்ட பல முக்கியமான உள்கட்டமைப்புகள் முடங்கின. மேலும், ஈரானில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் ‘பாடேசாபா’ (BadeSaba) என்ற செயலி ஹேக் செய்யப்பட்டு, அதன் மூலம் பயனர்களுக்கு விசித்திரமான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

   

இந்திய நிறுவனங்களும் இந்த அச்சுறுத்தல்களை முன்கூட்டியே எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. பல முன்னணி ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது சைபர் கட்டுப்பாட்டு மையங்களை (Cyber control centres) முடுக்கிவிட்டு, வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பாதுகாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எதிர்காலத்தில் நாடுகளுக்கு இடையிலான இணையப் போர்களின் தாக்கம் விஸ்வரூபம் எடுக்கும் என்பதால், இந்திய நிறுவனங்கள் இணையப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி தங்களது உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.