பாமக யாருடன் கூட்டணி…. முடிவை அறிவித்தார் ராமதாஸ்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

By Nanthini on மாசி 25, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கூட்டணி மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டம் குறித்து தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியை ஆதரிக்கும் நிலையில், ராமதாஸ் யாருடன் கைகோர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தச் சூழலில், தொண்டர்களின் குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் அவர் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், பாமக கடந்து வந்த போராட்டப் பாதையையும், இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த வரலாற்றையும் ராமதாஸ் நினைவு கூர்ந்துள்ளார். சமூக நீதிப் போரில் தமிழக அளவில் 4 மற்றும் தேசிய அளவில் 2 என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளைப் போராடிப் பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், பெண்களுக்கான சம உரிமை, போதை இல்லாத தமிழகம், தரமான கல்வி மற்றும் மருத்துவம் போன்ற இலக்குகளை அடைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

   

கூட்டணி குறித்து நிலவும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், “நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம், அதனால் கண்ணில் தென்படும் சாதாரண வாகனங்களில் சென்றால் இலக்கை அடைய முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது, அதில்தான் நாம் பயணிக்கப் போகிறோம்” என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். இது திமுக அல்லது ஒரு வலுவான கூட்டணியை அவர் தேர்வு செய்துள்ளதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

   

கடிதத்தின் இறுதியில், தொண்டர்களின் மனதில் இருக்கும் கலக்கத்தைப் போக்கும் விதமாக, சோர்வு என்பது பாமகவின் அகராதியிலேயே இல்லை என்று உற்சாகப்படுத்தியுள்ளார். “உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்” என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகளை மேற்கோள் காட்டி, இலட்சியத்தை வெல்வோம் என்றும், எப்போதும் தொண்டர்களோடு இணைந்தே இருப்பேன் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் பாமகவின் தேர்தல் நிலைப்பாடு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.