கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள அஸாகாவோ சந்திப்பில், வாடகைக்கு எடுக்கப்பட்ட மஹிந்திரா தார் வாகனம் ஒன்று ஹூண்டாய் i20 கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் போப்பாலைச் சேர்ந்த 65 வயதான பகத்ராம் சர்மா என்ற சுற்றுலாப் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த அந்த காரில் இருந்த மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த ஐந்து மாதக் குழந்தை எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியது. இந்த விபத்தின் போது தார் வாகனத்தை ஓட்டி வந்தவர்கள், தண்டனையிலிருந்து தப்பிக்க ஓட்டுநர் இருக்கையை மாற்ற முயன்றதாக நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களில், வாகனத்தில் இருந்த ஒரு இளைஞர் தனது தந்தையிடம் “அப்பா, நான் தான் அந்த சந்திப்பில் இருந்தேன்…” என்று பதற்றத்துடன் பேசுவது பதிவாகியுள்ளது.
மேலும் விபத்தின் போது ஒரு பெண்ணே வாகனத்தை ஓட்டியதாகவும், பின்னர் குற்றச்சாட்டை மாற்ற முயன்றதாகவும் கூறப்படும் நிலையில், கோவா போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஓட்டுநர் யார் என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
