ரஹ்மான் தமிழ் சினிமாவில் செய்த மாற்றம் இதுதான்… இயக்குனர் ராஜீவ் மேனன் பகிர்ந்த கருத்து!

By vinoth on ஜனவரி 7, 2025

Spread the love

இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.

தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர்தான் அந்த காலத்தில் ரஹ்மானின் பாடல்களை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றால் அது மிகையாது. அதன் பின்னர் இந்தி சினிமா, ஹாலிவுட் மற்றும் உலக சினிமா என அடுத்தடுத்து அவரின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே சென்றது.

   

இளையராஜா தன்னுடைய இசையால் தமிழ் சினிமாவை ஆண்டுகொண்டிருந்த போது ரஹ்மான் தன்னுடைய இருபதுகளில் அறிமுகமானார். ஆனால் முதல் படத்திலேயே தான் யாரென்பதை நிரூபித்து தேசிய விருது வரை சென்றார். முதல் படத்திலேயே அவர் இசை இந்தியா முழுவதும் அவரைக் கவனிக்க வைக்கும் இசையமைப்பாளர் ஆக்கியது.

 

இந்நிலையில் ரஹ்மானை மணிரத்னத்திடம் அறிமுகம் செய்து வைத்தவரான இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் ரஹ்மானின் சாதனைப் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் ரஹ்மானோடு பல விளம்பரங்களில் இணைந்து பணியாற்றினேன். அதில் பயன்படுத்திய சில இசைத் துணுக்குகளை அவர் ரோஜா படத்தில் கூட பயன்படுத்தினார்.

ரஹ்மான் தமிழ் சினிமாவில் செய்த சாதனை என்றால் அது அவரின் ஒலிகளின் தரம்தான். சிலக் கருவிகளை மட்டும் வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் சில விஷயங்களை சாத்தியப்படுத்தவே முடியாது என்று அதற்கு முன்னர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதை சாத்தியப்படுத்த முடியும் எனக் காட்டியவர் ரஹ்மான்தான்” எனக் கூறியுள்ளார்.